Ariyalur: கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள்; அரியலூரில் பரபரப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் இல்லா கிணற்றில் விழுந்த மூதாட்டியை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![Ambulance personnel safely rescued an old woman who fell into a well near Jayangondam in Ariyalur district vel Ambulance personnel safely rescued an old woman who fell into a well near Jayangondam in Ariyalur district vel](https://static-ai.asianetnews.com/images/01hzved1t012e39sfp524r9zt7/whatsapp-image-2024-06-08-at-13-36-08_363x203xt.jpg)
கடலூர் மாவட்டம் வானமாதேவி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செல்வி. 80 வயது மூதாட்டியான இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றி திரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் - கடாரங்கொண்டான் செல்லும் சாலையில் அமைந்துள்ள கொடப்பேரி அருகே மூதாட்டி செல்வி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நடுக்காட்டில் உள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களான ஓட்டுநர் குமரவேல், டெக்னீசியன் பிரேமா இருவரும் பொது மக்களின் உதவியுடன் தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மூதாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். கிணற்றில் விழுந்த மூதாட்டிக்கு கையில் லேசாக முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் உதவியுடன் மூதாட்டியை பத்திரமாக மீட்ட ஓட்டுநர் குமரவேல், டெக்னீசியன் பிரேமா உள்ளிட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தண்ணீர் இல்லா கிணற்றில் மூதாட்டி விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியும் மற்றும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.