யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனம்..?
இந்திய வீரர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பட்டியல் வெளியானது. இந்திய கேப்டன் விராட் கோலி, தோனி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று, வீரர்களின் ஊதிய உயர்வுக்கு பிசிசிஐ ஒப்புக்கொண்டது. அதன்படி, வீரர்களை தரம்பிரித்து அவர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது.
ஏ+, ஏ, பி, சி என வீரர்கள் தரம்பிரிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 7 கோடி ஊதியத்திற்கான ஏ+ கிரேடில் கோலி, ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய 5 வீரர்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்த பிரிவில் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
தோனி, அஸ்வின் உள்ளிட்ட 7 வீரர்கள் 5 கோடி ஊதியத்திற்கான ஏ பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தோனி இரண்டாவது தரத்தில் இடம்பெற்றிருந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த பட்டியலில் யுவராஜ் சிங்கின் பெயர் இடம்பெறவில்லை. கடந்த ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடந்த யோ-யோ டெஸ்டில் யுவராஜ் சிங் தேர்வாகவில்லை. அதன்பிறகு யோ-யோ டெஸ்டில் தேர்வானாலும் உள்ளூர் போட்டிகளில் சோபிக்கவில்லை.
அதனால் யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணியில் இடம்கிடைக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் உலக கோப்பையில் சேர்க்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கும் யுவராஜ் சிங், ஓய்வு குறித்து யோசிக்கவில்லை என அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் யுவராஜ் சிங்கின் பெயரே இடம்பெறாதது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.