உலக குத்துச்சண்டை: இந்தியா - கஜகஸ்தான் அணிகள் இன்று மோதல்; வெற்றி பெற்று கர்ஜிக்குமா இந்தியா?
உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில், இந்தியாவின் "இன்டியன் டைகர்ஸ்' அணியும், கஜகஸ்தானின் "அஸ்தானா அர்லான்ஸ்' அணியும் 5 எடைப் பிரிவுகளில் அரியாணா மாநிலம் ரோத்தக்கில் இன்று மோதுகின்றன.
உலக குத்துச்சண்டை தொடர் போட்டியில், இந்தியாவின் "இன்டியன் டைகர்ஸ்' அணியின் சார்பில் ஷியாம் குமார் ககாரா (49 கிலோ பிரிவு), எடாஷ் கான் முகமது (56 கிலோ), தீரஜ் (64 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சஞ்ஜீத் (91 கிலோ) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அவர்களை எதிர்த்து கஜகஸ்தானின் ஸசுபோவ் டெமிர்டாஸ் (49 கிலோ), கோஷ்செகுலோவ் நுர்சுல்தான் (56 கிலோ), மிஸிதோவ் தில்முராத் (64 கிலோ), அமன்குல் அபில்கான் (75 கிலோ), டர்லான்பெகோவ் அபில்கைர் (91 கிலோ) ஆகியோர் மோதுகின்றனர்.
உலக குத்துச்சண்டை தொடரில் இந்தாண்டு முதல் மீண்டும் இணைந்துள்ள இந்திய அணி, தனது சொந்த மண்ணில் களம் காண்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக வெளிநாட்டில் நடைபெற்ற 2 மோதல்களில் ஒன்றில் ஏற்கெனவே கஜகஸ்தானிடம் வீழ்ந்துள்ளது இந்தியா. மற்றொரு மோதலில் ரஷியாவின் பேட்ரியாட் பாக்ஸிங் அணியிடம் வீழ்ந்துள்ளது. அந்த இரண்டிலுமே 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.
இந்த 3-வது மோதலின் மூலமாக முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது இந்தியா. ஒரு எடைப் பிரிவுக்கான மோதலில், தலா 3 நிமிடங்கள் என்ற கணக்கில் 5 சுற்றுகள் நடைபெறும்.
இந்தப் போட்டியானது ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும் வாய்ப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.