ரொனால்டோ ஏன் அப்படி சொன்னார்? குழம்பி திரியும் ரியல் மாட்ரிட்....
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டமே, ரியல் மாட்ரிட் அணியின் தான் ஆடும் கடைசி ஆட்டம் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியதால் ரியல் மாட்ரிட் அணி பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
சனிக்கிழமை நள்ளிரவு கீவ் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வென்று 13-வது முறையாக கோப்பை வென்றது.
அந்த அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ (33) இறுதி ஆட்டத்தில் கோல் எதையும் அடிக்கவில்லை. மற்றொரு வீரரான கரெத் பாலே 2 கோல்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ வெல்லும் 5-வது சாம்பியன்ஸ் லீக் கோப்பை இதுவாகும். இந்த நிலையில் அவர், "அணியின் வெற்றியால் பெருமை கொள்கிறேன். இது நான் ரியல் அணிக்காக ஆடும் கடைசி ஆட்டமாகவும் இருக்கலாம். சில நாள்களில் எனது ரசிகர்களுக்கு உரிய பதிலை தெரிவிப்பேன்.
ரியல் மாட்ரிட் அணியில் இருப்பது மகிழ்ச்சியானது. தனிப்பட்ட சூழ்நிலைகளே தற்போது முக்கியமானது. ரியல் அணியிடம் இருந்து எந்த பெருமையான தருணங்களையும் நான் தற்போது எடுத்துக் கொள்ளப்போவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே அணியின் பயிற்சியாளர் ஸினடேன், கேப்டன் ரமோஸ் ஆகியோர், "ரொனால்டோ ஏன் இவ்வாறு கூறினார்? எனத் தெரியவில்லை. அவர் கோல் அடித்தாலும், அடிக்கவிட்டாலும் நட்சத்திர வீரர். அவர் ரியல் அணியிலேயே நீடிக்க வேண்டும். இதைவிட சிறந்த இடம் அவருக்கு இல்லை" என்று தெரிவித்தனர்.