why ashwin is not selecting for one day team

இந்திய அணியின் சுழற்பந்து மன்னனாக திகழ்ந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன் என தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தபோது, சுழற்பந்துவீச்சில் அவரது முதல் தேர்வாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இருவருக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வு, மைதானத்தில் வெளிப்படுவதை அவ்வப்போது பார்த்திருக்க முடியும்.

ஆனால், கடந்த சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு, இந்திய அணியில் லெக் ஸ்பின்னர்களுக்கும் மணிக்கட்டை சுழற்றி வீசும் சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டு சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அணியில் இடம்பிடிக்காத இந்த 4 மாதங்களில், லெக் ஸ்பின் போட்டு பயிற்சி எடுத்த அஸ்வின், தென்னாப்பிரிக்க தொடருக்கு தன்னை தயார்படுத்தினார். ஆனாலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டுமே அஸ்வினுக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் பிரசாத், அஸ்வினும் ஜடேஜாவும் இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். அவர்களுக்காக இந்திய அணியின் கதவு எப்போதுமே திறக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைக்கும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாகவே அவர்களை எடுக்கவில்லை என விளக்கமளித்தார்.

அதேபோல், அதிரடி பேட்ஸ்மேனும் சிறந்த ஃபீல்டருமான சுரேஷ் ரெய்னாவும் யோ-யோ டெஸ்டில் தேர்வாகியும் கூட உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடததால், தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெறவில்லை.