உலகின் அதிவேக ஓட்டப் பந்தய வீரரான ஐமைக்காவின் உசேன் போல்ட்டிடம் இருந்து தங்கப் பதக்கத்தை பறித்ததன் மூலம் "டிரிப்பிள்-டிரிப்பிள்' (மூன்று ஒலிம்பிக்கிலும் தலா மூன்று தங்கம் வென்றவர்) என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்
2008-இல் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் 400 மீ. தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற போல்ட் அணியில் இடம் பெற்றிருந்த நெஸ்டா கார்ட்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியது அம்பலமானதைத் தொடர்ந்து ஜமைக்கா அணியின் தங்கப் பதக்கத்தை பறித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி).
ஜமைக்கா அணியில் நெஸ்டர், போல்ட் தவிர, ஆசாபா பாவெல், மைக்கேல் ஃபிரேட்டர் ஆகியோரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊக்கமருந்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து 2008 முதல் 2012 வரையிலான காலங்களில் 458 வீரர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறு ஆய்வு செய்தது ஐஓசி.
அதில் கார்ட்டர், தடை செய்யப்பட்ட மெத்தில் ஹெக்ஸானியாமைன் என்ற மருந்தை பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள போல்ட், அதில் 100மீ., 200மீ., 400மீ. தொடர் ஓட்டங்களில் தங்கம் வென்றிருந்தார்.
ஒட்டு மொத்தமாக 9 தங்கப் பதக்கம் வென்றிருந்த போல்ட், இப்போது ஒரு தங்கப் பதக்கத்தை பறிகொடுத்ததன் மூலம் "டிரிப்பிள்-டிரிப்பிள்' (மூன்று ஒலிம்பிக்கிலும் தலா மூன்று தங்கம் வென்றவர்) என்ற அந்தஸ்தை இழந்துள்ளார்.
ஜமைக்கா அணியின் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டதால், 2008-இல் வெள்ளி வென்ற டிரினிடாட் அன்ட் டொபாக்கோ அணி தங்கப் பதக்கமும், வெண்கலம் வென்ற ஜப்பான் அணி வெள்ளிப் பதக்கமும், 4-ஆவது இடத்தைப் பிடித்த பிரேசில் அணி வெண்கலப் பதக்கமும் வென்றதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
