கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கோலியின் செய்கை ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பியது எப்படி என விராட் கோலி விளக்கமளித்துள்ளார். 

கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் கோலியின் செய்கை ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதிலிருந்து தப்பியது எப்படி என விராட் கோலி விளக்கமளித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வம்பிழுக்கும் எதிரணி வீரர்களுக்கு பதிலட் கொடுக்கும் விராட் கோலியின் குணம் அனைவரும் அறிந்ததே. எதிரணி வீரர்கள் மட்டுமல்ல; ஊடகங்கள், ரசிகர்கள் என எந்த தரப்பு தன் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும் அவற்றையெல்லாம் அடாவடியாக எதிர்கொள்பவர் விராட் கோலி.

இந்திய அணியின் கேப்டனான பிறகுகூட இன்னும் அப்படித்தான் இருக்கிறார். அப்படியென்றால் அவரது இளமைக்கால செயல்பாடுகள் குறித்து சொல்லவா வேண்டும்..? மிகவும் ஆக்ரோஷமான கோலி, களத்தில் தனது செயல்பாடுகளால் ஊடகங்களில் தலைப்பு செய்தியாகிவிடுவார்.

அதிலும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், கோலி எப்போது சிக்குவார் என காத்திருப்பார்கள். கோலி சிக்கிவிட்டால், வைத்து செய்துவிடுவார்கள். அப்படித்தான் கடந்த 2012ல் கோலி மாட்டிக்கொண்டார். 

கடந்த 2012ம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில், பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கோலியை சில ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அதை பொறுத்துக்கொள்ள முடியாத கோலி, கையின் நடுவிரலை உயர்த்திக்காட்டி செய்கை செய்தார். மேற்கத்திய நாடுகளில் அது, அநாகரீகமான செயல். கோலி இப்படி செய்தது, மறுநாள் அனைத்து ஆஸ்திரேலிய ஊடகங்களிலும் தலைப்பு செய்தியானது. அதன்பிறகு கோலியின் அந்த செயலுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

அதுதொடர்பாக தற்போது கோலி விளக்கமளித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். 

அதில், சிட்னியில் நடந்த போட்டியில் நான் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அதனால் அவர்களை நோக்கி நடுவிரலை உயர்த்தி சைகை செய்தேன். பின்னர் மறுநாள் போட்டி நடுவர் ரஞ்சன் என்னை அழைத்தார். அவரை சந்தித்தபோது, நேற்று என்ன நடந்தது என கேட்டார். ஒன்றும் நடக்கவில்லையே என்றேன். கடும் கோபமடைந்த அவர், ஒரு நாளிதழை என் முன் வீசி, என்ன இது? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கோபமாக கேட்டார். 

ஏதோ பெரிய தவறு நடந்துவிட்டது என்பதை உணர்ந்த நான், உடனடியாக என்னை மன்னித்து விடுங்கள்; தடை செய்துவிடாதீர்கள், அதன் விபரீதம் அறியாமல் செய்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டேன். அவரும் என்னை ஏதும் சொல்லாமல் அனுப்பிவிட்டார் என்று கோலி கூறியுள்ளார். 

மேலும் இளமை காலத்தில் என்னுடைய செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அதை நினைத்து பெருமை கொண்டேன். யாருக்காகவும் என்ன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள கூடாது என நினைத்தேன். ஆனால் அதையெல்லாம் இப்போது நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை என கோலி தெரிவித்துள்ளார்.