ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த வாய்ப்பு கிடைக்கட்டும்.. அப்புறம் பாருங்க!! தெறிக்கவிடும் விஜய் சங்கர்
பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரின் பெயர், உலக கோப்பைக்கான அணியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய தொடர்களில் அணியில் இணைந்தார் விஜய் சங்கர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான விஜய் சங்கர், நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளில் 3ல் ஆடினார். அதில் கடைசி போட்டியில் ராயுடுவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்பாக ஆடினார் விஜய் சங்கர். அந்த ஆட்டம் அவர் மீதான நம்பிக்கையை அணி நிர்வாகத்துக்கு அதிகரித்தது.
அதன்பிறகு முதல் டி20 போட்டியில் முக்கியமான இடமான மூன்றாவது வரிசையில் களமிறக்கப்பட்டார். அதில் பெரிதாக சோபிக்கவில்லை. பின்னர் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர். தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் விஜய் சங்கர். 28 பந்துகளில் 43 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.
பவுலிங்கில் விஜய் சங்கர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் ஓரளவிற்கு ஆடினார். ஃபீல்டிங்கும் நன்றாக செய்தார். பவுண்டரி லைனிலிருந்து நேரடியாக ஸ்டம்பை அடித்து டெய்லரை அவர் செய்த ரன் அவுட் அபாரமானது. நியூசிலாந்து தொடரில் விஜய் சங்கர் சிறப்பாக ஆடியிருந்தார்.
ஆனால் பவுலிங் வீச மட்டும் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. அதிலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் ஆடிய விஜய் சங்கருக்கு பவுலிங் வீச வாய்ப்பே வழங்கவில்லை கேப்டன் ரோஹித் சர்மா. குருணல் பாண்டியாவின் பவுலிங்கை நியூசிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கியபோதும் கூட, ஒரு மாறுதலுக்கு விஜய் சங்கரிடம் பந்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடர் குறித்து பேசியுள்ள விஜய் சங்கர், கடந்த ஆண்டு நிதாஹஸ் டிராபி தொடரில் ஆடும்போது, பவுலிங் வீசி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தான் எனது கவனம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ரன்களை கட்டுப்படுத்தி வீச விரும்புகிறேன். சரியான ஏரியாக்களில் பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தி நெருக்கடி கொடுக்க விரும்புகிறேன். ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீச வாய்ப்பு கிடைத்தால் எனது பவுலிங் திறமையை காட்ட தயாராக இருக்கிறேன் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.