ரன் மெஷின் கோலி இன்றும் வான வேடிக்கை காட்டுவாரா? ஒன் டே தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் !!
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ள இந்திய அணி இன்று மாயாஜாலம் காட்டி வெற்றி பெறும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பரபரத்துக் கிடக்கின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டர்பன், செஞ்சூரியன் கேப்டவுன் ஆகிய இடங்களில் நடந்த முதல் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்திய – தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
இந்திய அணி ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில் எப்படியாவது ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகிறது.
3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி தென் ஆப்ரிக்க அணியை ஓட ஓட விரட்டி வெற்றிக்கனியை ருசித்தது. தற்போது இன்று நடைபெறவுள்ள 4 ஆவது ஆட்டத்திலும் தங்களது திறமையை இந்திய அணி வீரர்கள் முனைப்புடன் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்க மண்ணில் இதற்கு முன்பு அந்த அணிக்கு எதிராக 4 முறை ஒரு நாள் தொடரில் விளையாடி அனைத்திலும் இந்திய அணி தோல்வியே கண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் முதல்முறையாக தென்ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வசப்படுத்தி இந்தியா வரலாறு படைக்கும். மேலும் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் இந்தியா உறுதி செய்து விடும்.
பேட்டிங்கில் ரன் மெஷின் கேப்டன் விராட் கோலி ரன்களை விளாசித் தள்ளி வருகிறார். தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் சிறப்பாக ஆடுகிறார். தவானுக்கு இது 100-வது ஒரு நாள் போட்டி என்பதால் அவரும் இன்று வான வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஸ்ட் ஸ்பின்னர்ஸ் என அழைக்கப்படும் யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் இந்திய அணியின் வெற்றிக்கு ஆணிவேராக திகழ்கிறார்கள். தென்ஆப்பிரிக்கா இதுவரை இழந்துள்ள 28 விக்கெட்டுகளில் இவர்கள் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்கள். எனவே இவர்கள் இருவரும் தென் ஆப்ரிக்கா வீரர்களுக்கு கடும் சவாலாக இருப்பார்கள்.
அதே நேரத்தில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் ஆடாத அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் இன்று அணிக்கு திரும்புகிறார். இது தென் ஆம்ரிக்க அணிக்கு பெரும் பலமாக அமையும்.
இதனிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் இன்று இளஞ்சிவப்பு நிற சீருடையில் விளையாடுகின்றனர். இந்த ஆட்டத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகை ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மார்பக புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு எதிர்பார்ப்புகளுடன் இன்று ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில் . காலையிலும், இரவிலும் அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.