இந்தியாவில் ஒரு தொடரை கைப்பற்றினால், எங்களது கிரிக்கெட் வாழ்வை திரும்பிப் பார்க்கும்போது அது முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
இந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மும்பையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “எங்களது அணியின் ஒவ்வொரு வீரர்களும் அவர்களது பாணியில் விளையாட விரும்புவர்.
போட்டியின்போது களத்தில் எதிரணியினருடன் வாய்த்தகராறில் ஈடுபட அவர்கள் விரும்பினால், அதனால் அணிக்கு சாதகமான சூழல் கிடைக்குமென்றால், அத்தகைய செயலில் ஈடுபடலாம் என்று கூறுவேன்.
அது சரியான திசையில் செல்கிறதா, அதற்குறிய மனநிலையில் இருக்கிறோமா என்பதை அவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
இந்தியாவில் விளையாடுவது மிகச் சவாலானது. இங்கு ஒரு தொடரை கைப்பற்றினால், எங்களது கிரிக்கெட் வாழ்வை திரும்பிப் பார்க்கும்போது அது முக்கியமான ஒன்றாக இருக்கும்.
இது ஒரு கடினமான தொடராக இருக்கும். இந்தச் சவாலான தொடரால் எங்களது அணியினர் உற்சாகமடைந்து உள்ளனர்.
விளையாட்டைப் பொருத்த வரையில், அதிகம் ஸ்கோர் செய்யும் கோலியை வீழ்த்துவதற்கு திட்டங்கள் வகுத்து வருகிறோம்.
சிறப்பாக பேட்டிங் செய்யும் 6 வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது. அவர்களை எங்களால் வீழ்த்த இயலும்.
இந்திய அணிக்கு எதிராக மோதும்போது எவ்வாறு விளையாட வேண்டும் என்று சில திட்டங்கள் வகுத்துள்ளோம். அதையே தற்போது செயல்படுத்துவோம்.
இந்திய அணியில் சிறப்பான வேகப்பந்து மற்றும் சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். எனவே, பேட்டிங்கில் தடுப்பு ஆட்டம் என்பது எங்களுக்கு முக்கியமான ஒன்றாக இருக்கும்” என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.
