The tenth time champion in French Open is Welwara Nadal
ஸ்பெயினின் ரஃபேல் நடால், களிமண் ஆடுகளமான ரோலன்ட் கேரஸில் இன்னும் சில நாள்களில் தொடங்கவிருக்கும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் களமிறங்க காத்திருக்கிறார்.
பிரெஞ்சு ஓபனில் இதுவரை 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், இப்போது 10-ஆவது பட்டம் வெல்வதில் தீவிரமாக இருக்கிறார். இந்த பட்டம்தான் அவருடைய டென்னிஸ் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகிறது.
2005 பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றிய நடாலுக்கு, அதன்பிறகு ஏறுமுகம்தான். 2010-இல் அமெரிக்க ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றபோது, "ஓபன் எரா'வில் இளம் வயதில் (24 வயது) "கேரியர் கிராண்ட்ஸ்லாம்' (ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவற்றில் பட்டம் வெல்வது) வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்.
பிரெஞ்சு ஓபனில் 2014-இல் பட்டம் வென்றபோது அதில் அதிகமுறை (9 முறை) சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையும் அவர் வசமானது.
கடந்த டிசம்பரில் தனது பயிற்சியாளர் குழுவில் கார்லஸ் மோயாவை இணைத்தார். இதன்பிறகு நடாலின் ஆட்டம் மேம்பட, கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
கடந்த பிப்ரவரியில் வேறு வழியின்றி தனது சித்தப்பாவை பிரிந்த நடால், மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 10-ஆவது பட்டம் வென்றதோடு, ஒரே போட்டியில் 10 பட்டங்களை வென்றவர், களிமண் தரையில் 50 பட்டங்கள் வென்ற முதல் நபர் என்ற சாதனைகளை படைத்தார்.
அதைத் தொடர்ந்து பார்சிலோனா ஓபனில் 10-ஆவது பட்டம் வென்ற நடால், சமீபத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபனிலும் சாம்பியன் ஆனார். அதன் மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் அதிக பட்டம் வென்றவரான ஜோகோவிச்சின் சாதனையை (30 பட்டங்கள்) சமன் செய்தார்.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் காலிறுதியோடு வெளியேறிய நடால், "அடுத்த சில தினங்கள் மீன் பிடிப்பேன் அல்லது கோல்ஃப் விளையாடுவேன். அதன்பிறகு பிரெஞ்சு ஓபனில் களமிறங்கவுள்ளேன்' என கூறிச் சென்றிருக்கிறார்.
நடால் பிரெஞ்சு ஓபனில் அவர் நிச்சயம் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைத் தவறவிட்டால், இனி கிராண்ட்ஸ்லாம் பட்டமே வெல்ல முடியாமல் போகும். அதனால் இந்த முறை பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று, சர்வதேச டென்னிஸில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த நடால் முயற்சிப்பார்.
