the goal of winning the championship in the next Commonwealth Games - current world champion Saigom Mirabai
காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு" என்று பளுதூக்குதலில் நடப்பு உலக சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு கூறினார்.
உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் அனஹெய்ம் நகரில் கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 194 கிலோ எடையை தூக்கி உலக சாதனையுடன் தங்கம் வென்றார் இந்தியாவின் சாய்கோம் மீராபாய் சானு. இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தங்கம் வென்றது.
இதில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆவார். இந்த நிலையில், தனது வெற்றி குறித்து மீராபாய் கூறியது:
"ரியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு மிகவும் மனச்சோர்வடைந்தேன். அந்த ஏமாற்றத்தில் இருந்து மீண்டுவர நீண்ட காலம் ஆனது. பயிற்சியை நிறுத்திவிட்டு, பளுதூக்குதல் விளையாட்டை கைவிட நினைத்தேன்.
சமூக வலைதளங்களில் எனக்கும், எனது பயிற்சியாளருக்கும் எதிராக வெளியான விமர்சனங்கள் காயப்படுத்தின. அனைத்தையும் எவ்வாறு சரிசெய்வதென யோசித்தேன். தற்போது முயற்சிப்பதை விட மேலும் சிறப்பாக முயற்சிப்பதே விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் ஒரே வழி என உணர்ந்தேன்.
எனவே, பளுதூக்கும் நுட்பங்களில் மாற்றங்கள் கொண்டுவந்ததுடன், மனநல நிபுணரிடம் தொடர்ந்து ஆலோசனைகள் பெற்றேன். எனது இந்த மாற்றத்தில் மனநல மருத்துவருக்கும் பெரும் பங்கு உண்டு.
ஒவ்வாவொரு வாரமும் உலக மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புகளால் ஊக்கமருந்து சோதனைக்கு உள்படுத்தப்பட்டேன்.
ரியோ ஒலிம்பிக் தேர்வுப் போட்டியின்போது 192 கிலோ எடையை தூக்கினேன். ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியிருந்தார் நிச்சயம் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பேன். ஆனால், எனது முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் சற்று பதற்றமடைந்துவிட்டேன்.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்வது எனது கனவாகும். தற்போது அதை எட்டிவிட்டேன். அடுத்ததாக, காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு" என்று அவர் கூறினார்.
