The defeat of South Africa was due to the our bowlers and fielders

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நாங்கள் பெற்ற வெற்றி எங்கள் பெளலர்கள் மற்றும் பீல்டர்களாலே சாத்தியமானது என பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

எக்பாஸ்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானும், தென் ஆப்பிரிக்காவும் மோதின.

இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் சேர்த்தது..

பின்னர் பேட் செய்த பாகிஸ்தான் அணி 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

இதன்பிறகு தொடர்ந்து மழை பெய்யவே, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறியது:

“இந்த ஆட்டத்தில் எங்கள் பெளலர்கள் மற்றும் பீல்டர்களின் சிறப்பான செயல்பாட்டாலேயே வெற்றி சாத்தியமானது.

முகமது ஹபீஸ், இமாத் வாசிம் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். அதனால் நாங்கள் நெருக்கடியிலிருந்து மீண்டோம். அதன்காரணமாக சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது.

எப்போதுமே விக்கெட் விழத் தொடங்கிவிட்டால், எவ்வளவு பெரிய அணியும் ஆட்டம் கண்டுவிடும். தென் ஆப்பிரிக்க அணி விஷயத்தில் அதுதான் நடந்தது.

நாங்கள் இந்தியாவிடம் தோற்றபிறகு, எங்கள் அணியின் உதவி அலுவலர்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தனர். அதனால்தான் எங்களால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆட முடிந்தது என்றார்.