தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரரான மாரியப்பன், கடந்த ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார்.

இந்த நிலையில் அவரை கெளரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

22 வயதான மாரியப்பன் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது அவரது கிராமத்தில் உள்ள இளைஞர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிப்பு குறித்த தகவல் அறிந்ததும், மாரியப்பனின் வீட்டுக்கு ஏராளமான இளைஞர்கள் திரண்டு வந்து, அவரைத் தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாரியப்பன் கூறியது:

“தமிழ்நாட்டில் இருந்து பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டுக்காகப் பதக்கம் வென்ற எனக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.

இந்த விருதின் மூலம் என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளும் விளையாட்டுப் போட்டியில் சாதிப்பதற்கான ஊக்கத்தை மத்திய அரசு தந்துள்ளது.

விளையாட்டு வீரர்கள் குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், எதைக் கண்டும் கலங்காமல், தளர்ந்து விடாமல் விடாமுயற்சியுடன் சாதிக்க வேண்டும்” என்று மாரியப்பன் தெரிவித்தார்.