
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரவு உணவு இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அந்த அணி வெற்றி பெறுவதற்கு 38 ஓவர்களில் 114 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது.
பாகிஸ்தான் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் திடீரென மேற்கிந்தியத் தீவுகள் அபாரமாக ஆடியதால், ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருந்தது.
துபையில் பகலிரவாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 155.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 579 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அசார் அலி ஆட்டமிழக்காமல் 302 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 123.5 ஓவர்களில் 357 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டேரன் பிராவோ 87, சாமுவேல்ஸ் 76 ஓட்டங்கள் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 31.5 ஓவர்களில் 123 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
கடைசி 7 விக்கெட்டுகளை 30 ஓட்டங்களுக்கு இழந்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் தேவேந்திர பிஷு 8 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதையடுத்து 346 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி இரவு உணவு இடைவேளையின்போது 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
டேரன் பிராவோ 102, ஜேசன் ஹோல்டர் 8 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
