tamilnadu players dominate in indian cricket team
இந்திய அணியில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே போட்டியில் 3 தமிழக வீரர்கள் விளையாட உள்ளனர்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி, இந்தியா வந்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு தொடர்ச்சியாக வித்திட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் புவனேஷ்குமார், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். வரும் 23-ம் தேதி புவனேஷ்குமாருக்கு திருமணம் நடைபெற உள்ளதால் இலங்கை தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார்.

அதே நேரத்தில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க வீரர் ஷிகர் தவானும் விலகியுள்ளார்.

இதையடுத்து, புவனேஷ்குமாருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் ஷிகர் தவானுக்குப் பதிலாக முரளி விஜயும் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

திருநெல்வேலியை சேர்ந்த விஜய் சங்கர், 2015-லிருந்து இந்தியா ஏ அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், ரஞ்சி போட்டிகளில் மிகச்சிறந்த பேட்டிங் சராசரியை வைத்துள்ளதோடு 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

விஜய் சங்கரும் முரளி விஜயும் சேர்க்கப்பட்டால், அஸ்வினுடன் சேர்த்து 3 தமிழக வீரர்கள், இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் விளையாடுவர். தற்போதைய இந்திய அணியில், வேறு எந்த மாநிலத்திலிருந்தும் 3 வீரர்கள் இடம்பெறவில்லை.
