தென் மண்டல சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழகம், கர்நாடாக வாகைச் சூடியது…
தென் மண்டல சீனியர் கைப்பந்து போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழகமும், மகளிர் பிரிவில் கர்நாடகமும் வாகைச் சூடின.
புதுச்சேரி மாநில கைப்பந்து சங்கம் சார்பில், தென் மண்டல சீனியர் கைப்பந்து போட்டி தொடங்கியது.
கடந்த 24-ஆம் தேதி உப்பளம் இராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் தொடங்கிய இப்போட்டியில் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடின.
சனிக்கிழமை இரவு இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஆடவர் பிரிவில் தமிழகமும், புதுவையும் எதிர்கொண்டன.
இதில் தமிழக அணி 25-18, 25-21, 22-25, 25-19 என்ற செட் கணக்கில் புதுச்சேரியை வீழ்த்தி வாகைச் சூடியது.
அதேபோன்று, மகளிர் பிரிவில் கர்நாடகமும், தமிழகமும் மோதின.
இதில் கர்நாடக அணி 25-15, 25-20, 28-26 என்ற நேர் செட்களில் தமிழக அணியை வீழ்த்தி வாகைச் சூடின.
வாகைச் சூடிய ஆடவர், மகளிர் அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு கோப்பையுடன் தலா ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன.