tamil players are the main reason for indian team innings win
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய தமிழக வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
இலங்கைக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில், தொடக்க வீரர் முரளி விஜய் சதமடித்து அசத்தினார்.

சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய முரளி விஜய், நிதானமாக ஆடி சதமடித்தார். அவரது நிதான ஆட்டத்தைத் தொடர்ந்து புஜாரா, ரோஹித், கோலி ஆகியோரும் சிறப்பாக ஆடி, 610 ரன்களைக் குவித்தனர்.
டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரரின் ஆட்டம் மிக முக்கியமானது. அந்த வகையில் தொடக்க வீரரான முரளி விஜயின் சதம், இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு அடித்தளமாக அமைந்தது.
அதேபோல், இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் பேட்டிங் ஆர்டரை சரித்தார் அஸ்வின். மேலும், அந்த போட்டியில் தனது 300வது விக்கெட்டையும் வீழ்த்தினார். இதுவரை முரளிதரன், வார்னே போன்ற சுழல் ஜாம்பவான்கள்கூட அஸ்வினை விட அதிகமான போட்டிகளிலேயே 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆனால், 54 டெஸ்ட் போட்டிகளிலேயே 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் அசத்தினார்.

அஸ்வினின் சுழல் ஜாலம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
அந்த வகையில் பேட்டிங்கில் முரளி விஜயும் பவுலிங்கில் அஸ்வினும் இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர்.
