ஆரம்பத்துல அவங்க.. அப்புறம் நாங்க!! சென்னையை வீழ்த்த இதுதான் காரணம்!! ஆட்டநாயகனின் அதிரடி விளக்கம்
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதன்பிறகு ஷுப்மன் கில்லின் பொறுப்பான ஆட்டம் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால், 17.4 ஓவருக்கே இலக்கை எட்டி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
2 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, 32 ரன்களும் அடித்த சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய சுனில் நரைனிடம் நீங்கள் பேட்டிங் ஆல்ரவுண்டரா? அல்லது பவுலிங் ஆல்ரவுண்டரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுனில் நரைன், பவுலிங் தான் என்னை கிரிக்கெட் வீரராக்கியது. அதனால் தான் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் தான் என தெரிவித்தார்.
ஆனால், கொல்கத்தா அணியில் எனது பாணியில் ஆட சுதந்திரம் அளிக்கப்படுகிறது. அதுதான் பெரிய பலம். தினேஷ் கார்த்திக் ஸ்பின் பவுலர்களை பெரிதும் நம்புகிறார். இந்த வெற்றி, அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினர். பின்னர் நாங்கள்(ஸ்பின் பவுலர்கள்) எங்கள் பணியை சரியாக செய்தோம். மீண்டும் வெற்றி பெற்றது சிறப்பானது என நரைன் தெரிவித்தார்.