sunil gavaskar advice chahal and indian players
சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கவனமாக பந்துவீச வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
3-0 என்ற முன்னிலையுடன் வலுவான நிலையில், நான்காவது போட்டியை எதிர்கொண்ட இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
மழையும் மில்லருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளும்தான் இந்தியாவின் தோல்விக்குக் காரணங்கள். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது. 290 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கி தென்னாப்பிரிக்க அணி ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால், 28 ஓவராக குறைக்கப்பட்டு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

20 ஓவர் போட்டி போல மாறியதால் அந்த அணியினர் அதிரடியாக அடித்து ஆடி வெற்றி பெற்றனர். ஓவர் குறைக்கப்பட்டபோதும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், சாஹல் வீசிய 18வது ஓவர் தான் வெற்றி வாய்ப்பை இந்திய அணியிடமிருந்து பறித்தது.
18வது ஓவரில் ஒரு பந்தை மில்லர் தூக்கியடிக்க, எளிய கேட்சை தவறவிட்டார் ஸ்ரேயாஷ் ஐயர். அதற்கு அடுத்த பந்தில் மில்லர் கிளீன் போல்டானார். ஆனால் அது நோ-பால். அதுவரை இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் ஆட்டம் இருந்தது. ஆனால், இந்த இரண்டு வாய்ப்பிற்கு பிறகு அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார் மில்லர். மில்லரின் விக்கெட்டை வீழ்த்த தவறியதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், 3 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய வீரர்கள், இந்த போட்டியில் சற்று கவனக்குறைவாக விளையாடினர்.

வேகப்பந்து வீச்சாளர்கள் சில சமயங்களில் நோ-பால் போடுவது வழக்கம். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் நோ-பால் போடுகிறார் என்றால் அந்தளவுக்கு கவனக்குறைவாக விளையாடியுள்ளார். இந்த தவறை சரிசெய்து கவனமாக ஆடவேண்டும் என கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.
