சீனாவின் ஃபுசோ நகரில் இன்று தொடங்கும் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பில், மகளிர் பிரிவில் பி.வி.சிந்து, சாய்னா நெவால் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இதில் சாய்னாவைப் பொறுத்த வரையில் இந்தப் போட்டி அவருக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, ரியோவில் அதைவிடச் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், 2-ஆவது சுற்றிலேயே, தரவரிசையில் தன்னைவிட பின்தங்கிய உக்ரைனின் மரியா உலிடினாவிடம் வீழ்ந்தார். மேலும், காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் இருந்தார்.

சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் அவர் போட்டிக்குத் திரும்பியுள்ளார். தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் பார்ன்டிப் புரனாப்செர்ட்சுக்குடன் அவர் மோதுகிறார். முந்தைய போட்டிகளில் சாய்னா 9 முறை இவரை தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், சாய்னா இன்னும் முழு பலத்துடன் மீளவில்லை என்று அவரது பயிற்சியாளர் விமல் குமார் தெரிவித்துள்ளார்.

மறுமுனையில், ரியோ ஒலிம்பிக் மூலம் "வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை' என்ற பெருமையை தனதாக்கிய சிந்துவும் இதில் களம் காண்கிறார். அவர், சீன தைபேயின் சியா சின் லீயை தனது முதல் சுற்றில் எதிர்கொள்கிறார்.

இதுகுறித்து சிந்து கூறுகையில், "நல்ல பயிற்சியுடன் தயார் நிலையில் இருக்கிறேன். போட்டி அட்டவணையின்படி முதலில் யாருடன் மோதப்போகிறேன் என்பதைக் கூட அறிந்துகொள்ளவில்லை.

ஏதேனும் ஒரு நிலையில் அனைத்து நல்ல போட்டியாளர்களுடனும் விளையாட வேண்டியிருக்கும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் விளையாடுவதால், எவருக்கு எதிரான ஆட்டமும் எளிதாக இருக்கப்போவதில்லை. நாம் சிறந்த முறையில் விளையாட வேண்டியதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

ஆடவர் பிரிவில் அஜய் ஜெயராம், சீனாவின் ஸு சியுவானை எதிர்கொள்கிறார். ஹெச்.எஸ். பிரணாய் ஹாங்காங்கின் நிக் கா லாங் அங்கஸையும், சாய் பிரணீத் ஜெர்மன் வீரர் மார்க் ஸ்வைப்ளெரையும் தங்களது முதல் சுற்றில் எதிர்கொள்ள உள்ளனர்.