காயத்திலிருந்து மீண்டு வர ஆறு வாரங்கள் ஆகும் - தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அறிவிப்பு...
அடுத்த ஆறு வாரங்களில் காயத்திலிருந்து மீண்டு வருவேன் என்றும் அதுவரை ஓய்வு எடுக்கப்போவதாகவும் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்தார்.
வேகப்பந்து வீச்சால் எதிரணி வீரர்களை திணறடிக்கச் செய்பவர் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.
இவரது இடது குதிகாலில் தசை நார் கிழிந்ததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்கேற்று அவரால் பந்துவீச இயலவில்லை. அவர் இல்லாதது அந்த அணிக்கு பெறும் இழப்பாகவே கருதப்பட்டது.
எனினும், கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது. இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள், 6 ஒரு நாள், 3 டி-20 போட்டிகள் எஞ்சியுள்ளன.
இந்த நிலையில், கேப் டவுனில் செய்தியாளர்களிடம் ஸ்டெய்ன் கூறியதாவது:
"காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் என்னால் ஊன்றுகோலைப் பயன்படுத்தாமல் நடக்க முடியவில்லை. நான் வலது கை பந்துவீச்சாளர் என்பதால், இடது காலை முன்வைத்தே பந்து வீச வேண்டும். இடது காலுக்கு அதிக அழுத்தம் தர வேண்டும் என்பதால், காயத்திலிருந்து பூரண குணம் அடையும் வரை போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்த 6 வாரங்களில் காயத்திலிருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.