South Africa deserves this success - kohli

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் பெற்ற வெற்றிக்கு அந்த அணி தகுதி வாய்ந்ததுதான் என்று கேப்டன் விராட் கோலி பாராட்டி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின்போது மழையால் ஆட்டம் தாமதமானதால், அந்த அணிக்கு 28 ஓவர்களில் 202 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, தென் ஆப்பிரிக்கா 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

இதுகுறித்து இந்திய கேப்டன் விராட் கோலி,, "உண்மையில் இந்த வெற்றிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதியானது. இறுதி நேரத்தில் அவர்கள் செய்த முயற்சியை பாராட்ட வேண்டும். தொடர் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்க வேண்டும் என்பதை நாங்களும் அறிந்திருந்தோம்.

ஆனால், ஆட்டத்தில் முதலில் ஏற்பட்ட தடைக்குப் பிறகு தவன் - ரஹானே பேட் செய்யும்போது, அவர்களால் மீண்டும் அந்த உத்வேகத்தை பெற இயலவில்லை. அதேபோல், ஆட்டத்தின் அளவை குறைத்தது தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமாக மாறியிருக்கலாம். ஆட்டத்தை முழுமையாக ஆடியிருந்தால், அதன் முடிவை எவராலும் கணிக்க முடியாது.

ஏறத்தாழ டி20 போல் மாறியிருந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களையே முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பு சூழ்நிலைக்கு ஏற்றவாறு அடித்து ஆட வேண்டியிருந்தது. அந்த உத்வேகத்தில் இருந்தவர்களை கட்டுப்படுத்துவது கடினமான ஒன்று.

டி வில்லியர்ஸ் விக்கெட்டுக்குப் பிறகு ஆட்டம் எங்களுக்கு சாதகமானதாக நினைத்தோம். ஆனால், மில்லர் மற்றும் கிளாசென் ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.

மழைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தில் பந்து சற்று ஈரப்பதத்துடன் இருந்ததால், சுழற்பந்துவீச்சு சாதகமாகவில்லை. ஆடுகளமும் பேட்டிங்கிற்கு வசதியானதாக மாறியிருந்ததால், தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது" என்று அவர் கூறினார்.