சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். அவர் வென்ற முதல் சூப்பர் சீரிஸ் பிரீமியர் பட்டம் இது.

சீனாவின் புஜெள நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சிந்து 21-11, 17-21, 21-11 என்ற செட் கணக்கில் சீனாவின் சன் யூவை வென்றார்.
இதுவரை சன் யூவுடன் 6 முறை மோதியுள்ள சிந்து, 3-ஆவது முறையாக அவரை வீழ்த்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு சிந்து வென்றுள்ள முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இந்த வெற்றி குறித்து, "சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வெல்ல வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவாகும். அது நனவாகியுள்ளது. ஒலிம்பிக்கிற்கு பிறகு உங்களுடைய அடுத்த இலக்கு என்னவென்று அனைவரும் கேட்டார்கள். இந்த நிலையில் சூப்பர் சீரிஸ் போட்டியில் பட்டம் வென்றிருப்பது எனக்கு மிக முக்கியமானதாகும்.

ஒலிம்பிக்கிற்கு பிறகு என்னுடைய வாழ்க்கை பெரிய அளவில் மாறியிருக்கிறது. நான் கடுமையாக உழைத்து வருகிறேன். முதல்முறையாக சூப்பர் சீரிஸ் போட்டியில் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை' சிந்து தனது வெற்றிக் குறித்துத் தெரிவித்தார்.

மேலும், சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் வென்ற சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "சூப்பர் சீரிஸ் போட்டியில் முதல்முறையாக வென்றிருக்கும் சிந்துவுக்கு வாழ்த்துகள். சீன ஓபனில் மிகச்சிறப்பாக ஆடினீர்கள்' என குறிப்பிட்டுள்ளார்.