
இந்தியாவிற்காக இரண்டு வெள்ளி வென்ற பாரா சைக்கிள் சாம்பியனின் செயற்கைக் காலை கழற்றும்படி உத்தவரவிட்டு, விமான நிலைய அதிகாரிகள் அவரை வேதனைக்கு உள்ளாக்கினார்கள்
ஆசிய பாரா சைக்கிள் சாம்பியன்ஷிப்-2013 போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று இரண்டு வெள்ளிப்பதக்கங்களை வென்றவர் ஆதித்யா மேத்தா.
கடந்த 11-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கு சோதனை நடத்திக் கொண்டிருந்த அதிகாரிகள் அவர் அணிந்திருந்த செயற்கைக் காலை கழற்றும்படி கூறியுள்ளனர்.
செயற்கைக் காலை கழற்றி மீண்டும் பொருத்துவதால் ஏற்படும் வலியையும், வேதனையையும் மேத்தா விவரித்தபோதும், பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து பிடிவாதமாக சோதனை நடத்தியுள்ளனர்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆதித்யா மேத்தா, “சோதனையின்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் காயங்கள் இருப்பதைக் காண்பித்தும் பாதுகாப்பு அதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை. செயற்கைக் காலை ஒருமுறை கழற்றி அணிய 45 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், என் செயற்கைக் காலை நிதானமாக அணியக்கூட அவர்கள் அவகாசம் தரவில்லை. அவற்றை விரைவாக அணியுமாறு என்னை அவசரப்படுத்தினார்கள். இதனால் என் காலில் அடிபட்டு இரத்தம் வந்தது.
இதே போன்ற சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பும் எனக்கு ஏற்பட்டது. கடந்த முறை நான் யாரிடம் புகார் கூறினேனோ, அந்த அதிகாரியே என்னை இந்த முறை சோதனை அறைக்கு செல்லுமாறு உத்தர விட்டார். என் காலில் உள்ள பிரச்சினையைப் பற்றி கூறிய போது, அது உங்கள் பிரச்சினை என்று கூறினார்.
பெங்களூரு விமான நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட அவஸ்தை வேறு எந்த விமான நிலையத்திலும் ஏற்பட்ட தில்லை” என்று தெரிவித்தார்.
