கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பந்துகளை பறக்கவிட்ட கில்!! இளம் வீரர் நெகிழ்ந்த தருணம்
நான்காவது வரிசையில் களமிறக்கப்பட்டதற்கு இளம் வீரர் ஷுப்மன் கில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நடந்துவரும் ஐபிஎல் சீசனில் இளம் வீரர்கள் பலர் அசத்தி வருகின்றனர். பிரித்வி ஷா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அசத்தலாக பேட்டிங் ஆடிவருகின்றனர். கொல்கத்தா அணிக்காக ஆடும் இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு நேற்றைய சென்னைக்கு எதிரான போட்டியில்தான் முந்தைய ஓவர்களில் ஆடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திய கில், அரைசதம் அடித்து கொல்கத்தா அணியின் வெற்றி பெற செய்தார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் அசத்தி, கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த இந்திய வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். நல்ல பேட்டிங் திறமை வாய்ந்த இவரை, ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி எடுத்தது.
ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் கொல்கத்தா அணிக்காக ஆடிய போட்டிகளில் 7வது வீரராகவே களமிறக்கப்பட்டு வந்தார். அதனால் அவருக்கு பேட்டிங் ஆட போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசி ஓவர்களில், நெருக்கடியான நிலைகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. எனினும் அதிலும் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான பங்களிப்பை செய்தார் கில்.
இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஷுப்மன் கில்லை 4ம் வரிசையில் இறங்க செய்தார் கேப்டன் தினேஷ் கார்த்திக். நடு ஓவர்களில் ஆட கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஷுப்மன் கில், அரைசதம் அடித்து, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததோடு, கொல்கத்தா அணியையும் வெற்றி பெற செய்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஷுப்மன் கில், 4வது வரிசையில் களமிறக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவரை ஆடிய போட்டிகள் சிறந்த அனுபவமாகவே உள்ளன. ஜாக் காலீஸ் மற்றும் சைமன் கேடிச் போன்ற ஜாம்பவான்களின் பயிற்சியின் கீழ் ஆடும்போது, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என கில் தெரிவித்தார்.