sehwag guessed this time ipl champion

இந்த முறை ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அதுவரை மற்ற அணி வீரர்களை எதிரணி வீரர்களாகவே பார்த்து பழக்கப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாற்று அணியினருடன் வீரர்கள் இணைந்து விளையாடுவதை பார்ப்பது பெரும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதுவரை 10 சீசன்கள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 11வது சீசன் ஆகும். இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில், மும்பை அணி அதிகபட்சமாக மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளது.

சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகள் தலா 2 முறையும் ராஜஸ்தான் அணி ஒரு முறையும் ஐபிஎல் தொடரை வென்றுள்ளன.

ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப், பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.

சூதாட்டப் புகார் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை ஆடுகின்றன. அதனால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், இந்த முறை எந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும் என்பது தொடர்பாக முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணியின் ஆலோசகராக சேவாக் உள்ளார். இதுதொடர்பாக கூறிய சேவாக், இதுவரை ஐபிஎல் தொடரை வெல்லாத பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய அணிகளில் ஒரு அணிதான் வெல்லும். புது வீரர்கள் இந்த தொடரில் விளையாட உள்ளதால் தொடர் சுவாரஸ்யமாகவே இருக்கும் என சேவாக் தெரிவித்தார்.