யுவராஜ் சிங் இருக்கும்போது அஸ்வினை கேப்டனாக்கியது ஏன்..? சேவாக் விளக்கம்
பஞ்சாப் அணியில் அனுபவம் வாய்ந்த யுவராஜ் சிங் இருக்கும்போது ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டனாக்கியது கிரிக்கெட் ரசிகர்களை வியப்புக்கு உள்ளாக்கியது.
சென்னை அணிக்காக ஆடிவந்த ஸ்பின் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வினை இந்த முறை பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து இதுவரை சென்னை அணிக்காக ஆடிவந்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார்.
பஞ்சாப் அணிக்கு முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ஆலோசகராக உள்ளார். பஞ்சாப் அணியில், யுவராஜ் சிங், ஆரோன் ஃபின்ச், டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் உள்ள நிலையில், அவர்களை விடுத்து யாரும் எதிர்பாராத விதமாக அஸ்வின் கேட்பனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவராஜ் சிங் இருக்கும்போது அஸ்வினை கேப்டனாக்கியது ஏன்? என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக் விளக்கமளித்துள்ளார். அதில், தனிப்பட்ட முறையில் ஒரு பவுலர் கேப்டனாக இருக்க வேண்டும் என நான் விரும்பினேன். கேப்டனுக்கான பட்டியலில் யுவராஜ் சிங்கும் இருந்தார். ஆனால் அணியின் பெரும்பாலான நிர்வாகிகள் அஸ்வினையே கேப்டனாக்கும்படி வலியுறுத்தினர். நீண்டகாலம் அணியில் நீடித்து இருக்க கூடிய ஒருவரை கேப்டனாக்க விரும்பினோம். அதனால்தான் அஸ்வின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாக அஸ்வின் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு அவரே கேப்டனாக நீடிப்பார். யுவராஜ் சிங் எனக்கு நெருங்கிய நண்பர். அது வேறு; இது வேறு என சேவாக் விளக்கமளித்துள்ளார்.