கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், கால்பந்து உலகின் GOAT லியோனல் மெஸ்ஸியும் மும்பை வான்கடே மைதானத்தில் சந்தித்தனர். இந்த நிகழ்வில், சச்சின் தனது 'நம்பர் 10' ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார். பதிலுக்கு மெஸ்ஸி உலகக் கோப்பைப் பந்தை வழங்கினார்.

கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின் டெண்டுல்கரும், உலக கால்பந்தின் அடையாளமான லியோனல் மெஸ்ஸியும் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மெஸ்ஸியின் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகின் இரண்டு 'GOAT'கள் (Greatest Of All Time) நேருக்கு நேர் சந்தித்தது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

மும்பையில் மெஸ்ஸி

2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற 38 வயதான மெஸ்ஸி, இன்று காலை மும்பைக்கு வந்தடைந்தார். மாலையில் அவர் வான்கடே மைதானத்திற்கு வருகை தந்தார்.

மெஸ்ஸி, அவருடன் அர்ஜென்டினா வீரர்களான ரோட்ரிகோ டி பால் மற்றும் லூயிஸ் சுவாரெஸ் ஆகியோரும் மைதானத்தில் இருந்தனர்.

முதலில், மெஸ்ஸி ரசிகர்களை நோக்கி பந்துகளை வீசியும், இந்திய கால்பந்துக் கேப்டன் சுனில் சேத்ரியுடன் உரையாடியும் நிகழ்ச்சியைத் தொடங்கினார். மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸைச் சந்தித்த பிறகு, அவர் சச்சினைச் சந்தித்தார்.

Scroll to load tweet…

நம்பர் 10 ஜெர்ஸி

சச்சின் டெண்டுல்கர் மைதானத்தின் நடுப்பகுதிக்கு வந்தபோது, அர்ஜென்டினா நட்சத்திரமான மெஸ்ஸிக்கு, தனது 'நம்பர் 10' ஜெர்சியைப் பரிசளித்தார். அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கரவொலியுடன் ஆரவாரம் செய்தனர்.

இதற்குப் பதிலாக, மெஸ்ஸியும் சச்சினை வெறுங்கையோடு அனுப்பவில்லை; அவர் தனது கையெழுத்திட்ட உலகக் கோப்பைப் பந்தை சச்சினுக்குப் பரிசாக வழங்கினார்.

பரிசுகளைப் பரிமாறிக்கொண்ட இருவரும், புன்னகையுடன் உரையாடினர். மெஸ்ஸி கூறியதை சச்சினுக்கு விளக்குவதற்காக, மெஸ்ஸியின் மொழிபெயர்ப்பாளரும் அப்போது உடனிருந்தார்.

சச்சினின் வாழ்த்து

மெஸ்ஸியிடம் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட சச்சின், "நீங்கள் இந்த விளையாட்டுக்கு ஆற்றியுள்ள அனைத்தையும் நாடே கண்டு பெருமை கொள்கிறது. நீங்கள் இந்தியா வந்து, வெவ்வேறு நகரங்களுக்குச் சென்று, ரசிகர்களை நேரில் சந்தித்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது," என்று கூறினார்.

"லியோவைப் பற்றி அவரது ஆட்டத்தைப் பற்றி நான் பேச வேண்டியதில்லை, அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார். அவரது அர்ப்பணிப்பு, மன உறுதி, விடாமுயற்சி மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பணிவு காரணமாக அவர் மிகவும் நேசிக்கப்படுகிறார். மும்பைவாசிகள் சார்பாகவும் இந்தியர்கள் சார்பாகவும் மெஸ்ஸிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்து கூறுகிறேன்" என்று சச்சின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர்' கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக முடிந்துள்ளது. திங்கட்கிழமை டெல்லியில் நடைபெறும் நிகழ்வுடன் அவரது இந்தியச் சுற்றுப்பயணம் நிறைவுபெறுகிறது.