கோலி விஷயத்தில் பெருந்தன்மையாக நடந்துகொண்ட சச்சின்!!
சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்டர் என்ற பெயர் பெற்றுள்ள கோலி, போட்டிக்கு போட்டி சாதனைகளையும் சதங்களையும் குவித்து வருகிறார். அதிலும் நடந்துவரும் தென்னாப்பிரிக்க தொடரில் பல்வேறு சாதனைகளை குவித்துள்ளார். மேலும் பல சாதனைகளை குவிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 558 ரன்கள் குவித்தார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் ஒரே தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர், விரைவில் 17,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைகளை எல்லாம் கோலி படைத்தார்.
மேலும் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 909 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டியில் 912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஐசிசி தரவரிசையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலுமே 900 புள்ளிகளை கடந்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
35 ஒருநாள் சதங்கள், 21 டெஸ்ட் சதங்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் 56 சதங்களை கோலி விளாசியுள்ளார். சச்சின் உட்பட சர்வதேச அளவில் பல ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துவரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துவிடுவார் என கங்குலி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சச்சின், சாதனை என்றாலே முறியடிப்பதற்குத்தான். ஒருவர் சாதனையை மற்றொருவர் முறியடிப்பதுதான் இயல்புதான் என பெருந்தன்மையுடன் பதிலளித்தார்.