திருப்பதி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ராஜ்யசபா எம்.பி.யுமான தெண்டுல்கர், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜூவாரி கன்ட்ரிகா என்ற கிராமத்தை கடந்த 2014–ம் ஆண்டு தத்தெடுத்தார்.
தத்தெடுத்த அந்த கிராமத்தில் குடிநீர், கழிப்பறை, சாலை வசதி உள்ளிட்ட 15 திட்டங்களை மேற்கொள்ள தனது எம்.பி. நிதியில் இருந்து தெண்டுல்கர் ரூ.2.80 கோடி ஒதுக்கீடு செய்தார். நெல்லூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.3.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புதிய வசதி திட்டங்களின் தொடக்க விழா அந்த கிராமத்தில் உள்ள புதிய பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் தெண்டுல்கர் கலந்து கொண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார்.
சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்ற தெண்டுல்கரை அந்த சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அந்த ஊர் மக்களுடன் தெண்டுல்கர் கலந்துரையாடினார்.
கிராம மக்கள் சுற்றுப்புறத்தை துய்மையாக வைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெண்டுல்கர் பாராட்டினார்.
அத்துடன் அருகில் உள்ள கோலபள்ளி கிராமத்தை தத்தெடுப்பதாக தெண்டுல்கர் அறிவித்தார். அந்த கிராமம் ரூ.3கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
