கொடுத்த வாக்கை காப்பாற்றி இலங்கை ரசிகரை நெகிழவைத்த ரோஹித்!!
கடந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் வந்திருந்தது. அப்போது இலங்கை அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக இலங்கை ரசிகர் முகமது நீலமும் இந்தியா வந்திருந்தார். இவர் ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய ரசிகர்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின்போது முகமது நீலமின் தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அந்த தகவல் முகமது நீலமிற்கு கிடைத்தும், உடனடியாக விமான டிக்கெட் கிடைக்காமல் பரிதவித்தார்.
இதை அறிந்த இந்திய வீரர் ரோஹித் சர்மா, தனது உதவியாளர் மூலம் முகமது நீலமிற்கு உடனடியாக விமான டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பிவைத்தார். அப்போது, இலங்கைக்கு வரும்போது உங்கள் வீட்டிற்கு வந்து தந்தையை பார்க்கிறேன் என்ற வாக்குறுதியையும் ரோஹித் அளித்திருந்தார்.
தற்போது இலங்கையில் நடந்துவரும் முத்தரப்பு தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு ரோஹித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே அளித்த வாக்குறுதியின் படி, கொழும்புவில் உள்ள முகமது நீலமின் வீட்டிற்கு சென்று அவரது தந்தையை சந்தித்துள்ளார்.
ரோஹித் சர்மா, தனது வீட்டிற்கு வந்ததால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் முகமது நீலம். ரோஹித் சர்மா நல்ல மனதுக்கு சொந்தக்காரர். மிகவும் எளிமையாக பழகக்கூடியவர். சச்சின் டெண்டுல்கருக்கு மிகத்தீவிரமான ரசிகராக எப்படி சுதீர் உள்ளாரோ.. அதேபோல் தான், நான் ரோஹித் சர்மாவுக்கு என மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் கூறியுள்ளார் முகமது நீலம்.