பிசிசிஐ-யின் நடவடிக்கை இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.  

பிசிசிஐ-யின் நடவடிக்கை இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

14வது ஆசிய கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. இந்திய அணி முதல் போட்டியில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது. இன்று ஹாங்காங்குடன் மோதும் இந்திய அணி, நாளை பாகிஸ்தானுடன் மோதுகிறது. இரு போட்டிகளுக்கு இடையேயும் இடைவெளியே இல்லாததால் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொளுத்தும் வெயில், இந்திய வீரர்களுக்கு பெரும் சவால் என்றால், அடுத்தடுத்த நாட்களில் போட்டி நடப்பது கூடுதல் சவால். உலக கோப்பைக்கு முந்தைய மிகப்பெரிய சர்வதேச தொடர் இது என்பதால், இதை உலக கோப்பையின் முன்னோட்டமாக நினைத்து இந்திய அணி களமிறங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் கணிசமான இடது கை பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அதேபோல ஆஸ்திரேலிய அணியிலும் கணிசமான இடது கை பந்துவீச்சாளர்கள் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

எனவே ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, அந்த அணிகளின் இடது கை பந்துவீச்சாளர்களை இந்திய வீரர்கள் திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இலங்கை அணியின் முதல்தர வீரரும், இடது கை பவுலருமான நுவான் செனவிரத்னேவை, இந்திய வீரர்களுக்கு பயிற்சியில் பந்துவீச பிசிசிஐ எடுத்துள்ளது. மேலும் அவர் உதவி ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட உள்ளார்.

இவரது பந்துவீச்சில் பயிற்சி மேற்கொள்வது இந்திய வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் இது பிசிசிஐ எடுத்துள்ள மிகச்சிறப்பான நடவடிக்கை எனவும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அவரை பந்துவீச வைத்து ரோஹித் சர்மா தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.