ரோஹித் - கோலி பொறுப்பான ஆட்டம்!! இலக்கை நெருங்கிய இந்திய அணி
ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 62 ரன்களில் சாண்ட்னெரின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
மவுண்ட் மாங்கனியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. நியூசிலாந்து அணியின் முதல் 3 விக்கெட்டுகள் விரைவில் இழந்துவிட்டாலும், நான்காவது விக்கெட்டுக்கு டெய்லர் - டாம் லதாம் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.
இருவருமே அரைசதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த லதாம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மளமளவென சரிய, டெய்லரும் 93 ரன்களில் அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். அந்த அணியின் டெயிலெண்டர்கள் வரிசையாக அவுட்டாகினர். அதனால் அந்த அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
244 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சிறப்பாக தொடங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடிய தவான், 6 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்த நிலையில், டிரெண்ட் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ரோஹித்துடன் கோலி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, 62 ரன்களில் சாண்ட்னெரின் பந்தில் ஸ்டம்பிங் ஆகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து அரைசதம் அடித்த கேப்டன் கோலியும் 60 ரன்களில் போல்ட்டிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரோஹித் - கோலி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தது. இவர்களின் விக்கெட்டுகளுக்கு பிறகு ராயுடுவும் தினேஷ் கார்த்திக்கும் ஆடிவருகின்றனர். 180 ரன்களை கடந்துவிட்ட இந்திய அணி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருக்கிறது.