இந்திய வீரர்களில் இவருக்குத்தான் மவுசு!! ஒருத்தருக்கு மட்டும் வாரி வழங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 11வது சீசனுக்கான வீரர்கள் ஏலம், பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இந்த ஏலத்தில், இதுவரை ஐபிஎல்-லில் ஆதிக்கம் செலுத்திவந்த வெளிநாட்டு சீனியர் வீரர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டனர். கிறிஸ் கெய்ல், ஆம்லா, மலிங்கா, டேல் ஸ்டெயின், கோரி ஆண்டர்சன், ஜோ ரூட், இயன் மோர்கன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
ஆனால் அதேநேரத்தில் இந்திய வீரர்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக காணப்பட்டது. இளம் வீரர்களான லோகேஷ் ராகுலை பஞ்சாப் அணியும் மனீஷ் பாண்டேவை ஹைதரபாத் அணியும் தலா 11 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தன.
சஞ்சு சாம்சனை 8 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. கேதர் ஜாதவை ரூ.7.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. குருனல் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா ஆகிய வீரர்களுக்கும் கணிசமான விலை கொடுக்கப்பட்டது.
இவ்வாறு இந்த ஐபிஎல் ஏலத்தில் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதிலும் இன்றைய ஏலத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத்தை ரூ.11.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.
இரண்டாவது அதிகபட்ச விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீரர் உனாத்கத் ஆவார். அதிகபட்சமாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.
அவரையும் ராஜஸ்தான் அணிதான் வாங்கியது. அவருக்கு அடுத்த படியாக அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் உனாத்கத்.
இதன்மூலம் ராகுல், மனிஷ் பாண்டே ஆகிய இந்திய வீரர்களை பின்னுக்குத் தள்ளி அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்திய வீரர் பெருமைக்கு உனாத்கத் சொந்தக்காரர் ஆகிவிட்டார்.