இந்தி நடிகையுடன் காதலா..? மனம் திறக்கும் ராகுல்
இந்தி நடிகை நிதி அகர்வாலும் கிரிக்கெட் வீரர் ராகுலும் ஒன்றாக மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு சென்ற புகைப்படம் வைரலாகி, பல வதந்திகளுக்கு வழிவகுத்தது. இந்நிலையில், தங்களுக்கு இடையேயான உறவு குறித்து ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரர் ராகுல், இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனது திறமையை நிரூபித்து காட்டினார். இதுவரை டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ராகுல், தற்போது அனைத்து வகை போட்டிகளுக்கான அணியிலும் இடம்பிடித்துவிட்டார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய ராகுல், அதிரடியில் மிரட்டினார். இந்த சீசன் பஞ்சாப் அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும், ராகுலுக்கு சிறப்பாகவே அமைந்தது. ஐபிஎல் முடிந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக, ராகுலும் இந்தி நடிகை நிதி அகர்வாலும் மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு ஒன்றாக சென்ற புகைப்படம் வைரலானது.
அதனால் இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்தது. அதுதொடர்பான பல்வேறு தகவல்களும் வதந்திகளும் உலவ ஆரம்பித்தன. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல், தனக்கும் நிதி அகர்வாலுக்கும் இடையேயான உறவு குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? எனக்கு நிதி அகர்வாலை நீண்ட காலமாக தெரியும். இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அவரது துறையில் அவர் அடைந்துள்ள வளர்ச்சி சிறப்பானது. நான் கிரிக்கெட்டராகவும் நிதி அகர்வால் நடிகையாகவும் இருக்கும்போதே எங்களுக்கு அறிமுகம் உண்டு.
அன்றைய தினம் ஹோட்டலுக்கு சென்றது நானும் நிதியும் மட்டுமல்ல. பெங்களூருவிலிருந்து மற்ற சில நண்பர்களும் வந்திருந்தார்கள். நண்பர்களை சந்தித்து அவர்களுடன் இருப்பது சிறந்தது. அதை தவிர வேறு ஒன்றுமில்லை. நான் யாரையாவது நேசித்தால், அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டே பழகுவேன். அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எனது காதலியை இளவரசி போல பார்த்துக்கொள்வேனே தவிர மறைத்து வைத்திருக்க மாட்டேன் என ராகுல் தெரிவித்தார்.