டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்து, இரசிகர்களை ஏமாற்றினார்.

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற 2-ஆவது சுற்றில் சிந்து 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில் உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சயாக்கா சாட்டோவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் ஒரு மணி, 5 நிமிடங்கள் நடைபெற்றது.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு பங்கேற்ற முதல் போட்டியிலேயே 2-ஆவது சுற்றோடு வெளியேறியது சிந்துவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

வெள்ளி வென்றபின் மொத்த இந்தியாவின் பார்வையும் சிந்துவின் பக்கம் திரும்பிய நிலையில், இந்த தோல்வி அவர் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்த இரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்துள்ளது.

ஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் அஜய் ஜெயராம் 21-23, 15-21 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷி யூகியிடமும், மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரணாய் 10-21, 20-22 என்ற நேர் செட்களில் மலேசியாவின் லீ சாங் வெய்யிடமும் தோல்வி கண்டனர்.