புரோ கபடி: தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி பரபரப்பான போட்டி டை! பெங்களூருவை வீழ்த்தி முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்
புரோ கபடி லீக் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் - டபாங் டெல்லி இடையேயான பரபரப்பான போட்டி டை ஆனது.
புரோ கபடி லீக்கின் 9வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஹைதராபாத்தில் இன்று 2 போட்டிகள் நடந்தன. பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் இடையேயான போட்டியில் ஜெய்ப்பூர் அணி முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடியது.
இந்த தொடரில் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவந்த பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிராக அந்த அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி 45 - 25 என்ற கணக்கில் ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி பெற்றது.
அடுத்த போட்டியில் தமிழ் தலைவாஸும் டபாங் டெல்லியும் மோதின. இந்த போட்டி தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணிகளுமே மாறி மாறி புள்ளிகளை பெற்றன. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிலையில், கடைசி வரை ஆட்டம் பரபரப்பாக இருந்தது. கடைசியில் 37-37 என ஆட்டம் டை ஆனது.
புள்ளி பட்டியலில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. புனேரி பல்தான், பெங்களூரு புல்ஸ், யு.பி யோதாஸ் அணிகள் அடுத்த 3 இடங்களிலும், தமிழ் தலைவாஸ் அணி 5ம் இடத்திலும் உள்ளன.