President of India give arjuna award to Tamil Para Athlete Mariyappan ...

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் இருந்து 2017-ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை தமிழக பாரா தடகள வீரர் தங்கமாரியப்பனும், ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதை பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவும் பெற்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2017-ஆம் ஆண்டுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா, அர்ஜுனா, தயான்சந்த் விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் கடந்த 22-ஆம் தேதி வெளியிட்டது.

தேசிய விளையாட்டு தினமான நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது மற்றும் பட்டயத்தை வழங்கினார்.

இதில், இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜ்ஜாரியாவுக்கும், இந்திய ஹாக்கி அணி வீரர் சர்தார் சிங்குக்கும் வழங்கப்பட்டது.

ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ் ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

வி.ஜே.சுரேகா (வில் வித்தை), குஷ்பீர் கெளர் (தடகளம்), பிரசாந்தி சிங் (கூடைப்பந்து), லைஷ்ராம் தேவேந்திர சிங் (குத்துச்சண்டை), சேதேஷ்வர் புஜாரா (கிரிக்கெட்), ஹர்மன்பிரீத் கெளர் (கிரிக்கெட்), ஒய்னம் பெம்பெம் தேவி (கால்பந்து), எஸ்.எஸ்.பி.செளராஸியா (கோல்ஃப்), எஸ்.வி.சுனில் (ஹாக்கி), ஜஸ்வீர் சிங் (கபடி), பி.என்.பிரகாஷ் (துப்பாக்கி சுடுதல்), சாகேத் மைனேனி (டென்னிஸ்), சத்யவர்த் கடியான் (மல்யுத்தம்), வருண் சிங் (பாரா தடகளம்) ஆகியோருக்கும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது மறைந்த ஆர்.காந்தி (தடகளம்), ஜி.எஸ்.எஸ்.வி. பிரசாத் (பாட்மிண்டன்), பிரிஜ் பூஷண் மொஹந்தி (குத்துச்சண்டை), பி.ஏ.ரஃபேல் (ஹாக்கி), சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கி சுடுதல்), ரோஷண் லால் (மல்யுத்தம்) ஆகிய 6 பேருக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கான தயான்சந்த் விருதை, பூபேந்தர் சிங் (தடகளம்), செய்யது ஷாகித் ஹக்கிம் (கால்பந்து), சுமராய் டெடெ (ஹாக்கி) ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.