உலகின் பழமையான மொழி தமிழ் என்றும், செஸ் விளையாட்டு உருவான இடத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பதாகவும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழ்நாட்டிற்கு பெருமை.
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு வெகு சிறப்பாக செய்துள்ளது. நாளை முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் தொடக்க விழா நடைபெற்றது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். கலைநிகழ்ச்சிகள் நடந்து முடிந்த பின், பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பெற்று, இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களான பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் ஜோதியை ஏற்றினர்.
செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கிவைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகக்குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்துள்ளது. செஸ் போட்டி உருவான தமிழகத்திலேயே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடப்பது சிறப்பானது. இந்தியா சுதந்திரம் பெற்று 75வது ஆண்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடப்பது சிறப்பானது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எக்காலத்திலும் நினைவில் இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கும் பல கோவில்கள் மிகவும் பழமையானவை. நமது கலாச்சாரத்தை பிரதிபலிப்பை. தமிழ்நாட்டில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோவில், கடவுளே செஸ் விளையாடியிருப்பதை காட்டுகிறது. உலகின் பழமையானன் மொழி தமிழ் என்று தமிழையும் தமிழர்களையும் பெருமைப்படுத்தும்படியான உரையை ஆற்றினார் பிரதமர் மோடி.
