Padma Bhushan award for Dhoni Dhoni - BCCI ...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய விக்கெட் கீப்பருமான தல தோனியின் பெயரை இந்தியாவின் 3-வது பெரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளீயிட்டார், அதில், “பத்ம பூஷண் விருதுக்கு பிசிசிஐ சார்பில் எம்.எஸ்.தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது பிசிசிஐ உறுப்பினர்களின் ஒரு மித்த முடிவாகும்.

தற்போதுள்ள கிரிக்கெட் வீரர்களில் தோனி தலைசிறந்த வீரர் ஆவார். அவருடைய பெயரை விருதுக்கு பரிந்துரைத்திருப்பது மிகப் பொருத்தமானது ஆகும். 

இந்தியாவுக்கு கிடைத்த தலைசிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். அவர், ஒரு நாள் போட்டியில் ஏறக்குறைய 10 ஆயிரம் ஓட்டங்களாய் நெருங்கிவிட்டார்.

90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போதுள்ள வீரர்களில் 90 டெஸ்டுகளுக்கு மேல் ஆடியவர்கள் யாரும் கிடையாது. இந்த விருதுக்கு பரிந்துரைக்க அவரைவிட சிறந்த வீரர் யாரும் இல்லை” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தாண்டு பத்ம விருதுகளுக்கு தோனியைத் தவிர வேறு யாருடைய பெயரையும் பிசிசிஐ பரிந்துரைக்கவில்லை என்பது கொசுறு தகவல்.

தல தோனியின் சில சாதனைகள்

36 வயதான தோனி 302 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 737 ஓட்டங்களையும், 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரத்து 876 ஓட்டங்களையும், 78 டி-20 போட்டிகளில் விளையாடி 1 ஆயிரத்து 212 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றிலும் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான்.

தோனிக்கு ஏற்கெனவே ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறை அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படும் பட்சத்தில் அந்த விருதைப் பெற்ற 11-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுவார் தல தோனி.