மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ஆயிரத்து 943 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2018-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்திய வீரர்கள் தயாராகி வரும் நிலையில், பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) சார்பில் நடைபெறும் பயிற்சி முகாம்களுக்கு ரூ.481 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.65 கோடி அதிகமாகும்.
தேசிய விளையாட்டு அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.302 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டில் ரூ.185 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது.
வட கிழக்கு மாநிலங்களின் விளையாட்டு திட்டங்களுக்கு ரூ.148.4 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.17 கோடி அதிகமாகும்.
ஜம்மு - காஷ்மீர் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நலப் பணித் திட்டத்துக்கு (என்.எஸ்.எஸ்.) ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.6.5 கோடி அதிகமாகும்.
தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
திறமை வாய்ந்த இளம் வீரர்களை அடையாளம் கண்டறியும் திட்டத்துக்கு ரூ.50 இலட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
"கேலோ இந்தியா' விளையாட்டு திட்டத்துக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ரூ.240 கோடி அதிகமாகும்.
