3வது டெஸ்ட் போட்டியும் புஸ்ஸாயிடுமோ..?
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை இழந்துவிட்டது.
முதல் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதனால் 2-0 என டெஸ்ட் தொடரை ஏற்கனவே தென்னாப்பிரிக்கா வென்றுவிட்டது.
இந்நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் மூன்றாவது போட்டி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும் லோகேஷ் ராகுலும் களமிறங்கினர். ரன் ஏதும் எடுக்காமல் ராகுல் நடையைக் கட்ட, 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முரளி விஜயும் ரபாடாவின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதனால் தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. கேப்டன் விராட் கோலியும் புஜாராவும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று வரலாற்று தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே போதும் என நினைக்கும் அளவிற்கு இந்திய அணி விளையாடி வருகிறது.