பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 300-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நிஷிகோரி தனது 2-ஆவது சுற்றில் 6-2, 7-5 என்ற நேர் செட்களில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியை தோற்கடித்தார். அடுத்த சுற்றில் பிரான்ஸ் வீரரான ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார் நிஷிகோரி.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிஷிகோரி, "500-ஆவது வெற்றி, ஆயிரமாவது வெற்றி போன்றவையெல்லாம் உங்களுக்குத்தான் தெரிகிறது. அதைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. இந்த ஆண்டு எனக்கு சிறப்பான ஆண்டாக அமைந்திருப்பதாக நினைக்கிறேன். ஏராளமான போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். அதிக அளவில் வெற்றிகளை பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் எனது ஆட்டம் வலுவடைந்து வருவதாக உணர்கிறேன். தற்போது நான் ஆடிவரும் விதம் எனக்கு மனநிறைவைத் தருவதாக அமைந்துள்ளது' என்றார்.