நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்டது.
நேப்பியரில் நேற்று நடைபெறவிருந்த நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் மழை மற்றும் மைதான சேதம் காரணமாக ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்டது.
மழை நின்று 5 மணி நேரம் ஆனபிறகும்கூட மைதானத்தை உலர வைக்க முடியவில்லை. இதனையடுத்து போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மைதானத்தில் தொடர்ந்து 2-ஆவது முறையாக மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஐந்து மணி நேரம் மைதானத்தை உலர வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து நேப்பியர் மைதானத்தின் தன்மை குறித்து நேப்பியர் சிட்டி கவுன்சில் விசாரணை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-ஆவது ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.
தற்போதைய நிலையில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
