நியூயார்க் ஓபன் டென்னிஸ்: தென் ஆப்பிரிக்க வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்...
நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சன் சாம்பியன் ஆனார். இது அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 4-ஆவது பட்டமாகும்.
நியூயார்க் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில், இறுதிச்சுற்றில் அமெரிக்கரான சாம் கெர்ரியுடன் மோதிய ஆன்டர்சன், 4-6, 6-3, 7-6(7/1) என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டிலேயே ஆன்டர்சன் 2-0 என முன்னிலை பெற்றார். விடாமல் போராடிய கெர்ரி 2-2 என சமன் செய்தார். ஒரு கட்டத்தில் ஆன்டர்சனின் சர்வை பிரேக் செய்த கெர்ரி, 5-3 என முன்னிலைபெற்றார். இறுதியில் அவரே 6-3 என செட்டை கைப்பற்றினார்.
2-ஆவது செட்டில் தனது சர்வில் இருந்த தவறுகளை திருத்திக் கொண்ட ஆன்டர்சன், 5-0 என ஆக்ரோஷமாக முன்னேறினார். சற்றே தடுமாறிய கெர்ரி 3 கேம்களை கைப்பற்றி மீண்டபோதும், ஆன்டர்சன் 6-3 என அந்த செட்டை முடித்து வைத்தார்.
வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் இருவருமே ஆக்ரோஷமாக ஆட, அந்த செட் டை பிரேக்கர் வரை சென்றது. ஆன்டர்சன் 5-0 என முன்னேறியபோது கெர்ரி ஆக்ரோஷத்தில் தனது ராக்கெட்டை உடைத்தெறிந்தார். இறுதியில் அந்த செட்டையும் ஆன்டர்சன் கைப்பற்றி சாம்பியன் ஆனார்.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் உள்பட 11 இறுதி ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ள ஆன்டர்சன், இந்த வெற்றியப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.