சென்னையை போராடித் தோற்கடித்தது புது டெல்லி; அப்படி ஒரு டஃப் கொடுத்து சென்னை…
தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை கஸ்டம்ஸ் அணியை போராடித் தோற்கடித்தது புது டெல்லி ஏர்போர்ஸ் அணி.
கரூரில் கடந்த 21-ஆம் தேதி முதல் திருவள்ளுவர் மைதானத்தில், எல்ஆர்ஜி நாயுடு கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வந்தது.
குரூப் "ஏ' பிரிவில் சென்னை ஐஓபி, புது டெல்லி சிஆர்பிஎப், இந்தியன் நேவி, சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
"பி' பிரிவில் கபூர்தாலா ரயில்வே கோச் அணி, புது டெல்லி ஏர்போர்ஸ், வாரணாசி டிஎல்டபிள்யூ, சென்னை கஸ்டம்ஸ் ஆகிய அணிகள் விளையாடின.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், நேற்றுக் காலை மூன்றாமிடம் மற்றும் நான்காமிடத்திற்கான போட்டிகளில் சென்னை ஐஓபி அணியும், இந்தியன் நேவி அணியும் மோதின.
இதில் 56-39 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை ஐஓபி அணி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களுக்கான இறுதிப்போட்டியில், சென்னை கஸ்டம்ஸ் அணியும், புது டெல்லி ஏர்போர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் புது டெல்லி ஏர்போர்ஸ் அணி 87 - 84 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை கஸ்டம்ஸ் அணியை போராடி தோற்கடித்தது.
வெற்றிப் பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
முதலிடம் பிடித்த புது டெல்லி ஏர்போர்ஸ் அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடித்த சென்னை கஸ்டம்ஸ் அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த சென்னை ஐஓபி அணிக்கு ரூ.25 ஆயிரம், நான்காமிடம் பிடித்த இந்தியன் நேவி அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.