இந்தியாவை வீழ்த்த இலங்கை அணிக்கு புது கேப்டன் நியமனம்; யார் தெரியுமா?
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக திசர பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகளுடனான தொடரில் தோல்வியைச் சந்தித்தது. இதனால், பல்வேறு விமர்சனங்களை தரங்கா எதிர்கொண்டு வந்தார்.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் ஓவரை வீசி முடிக்காத காரணத்தால் தரங்கா இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளுக்கான இலங்கை அணியின் கேப்டனாக இருந்த உபுல் தரங்காவுக்கு பதிலாக தற்போது பெரேரா பொறுப்பேற்றுள்ளார்.
பெரேரா கடந்த 2009-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக விளையாடத் தொடங்கினார். அப்போது முதல் 125 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.
ஆல் ரௌண்டரான பெரேராவின் ஸ்டரைக் ரேட் 109. பேட்டிங் சராசரி 17. ஒரு நாள் ஆட்டங்களில் மொத்தம் 133 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். பந்துவீச்சில் இவரது சராசரி 32.62.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பெரேரா 91 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து, அந்த அணிக்கு எதிரான டி20 தொடரில் 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.