இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரியை தூக்கிவிட்டு அனில் கும்ப்ளேவை நியமிக்குமாறு நெட்டிசன்கள் வலியுறுத்திவருகின்றனர்.  

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ரவி சாஸ்திரியை தூக்கிவிட்டு அனில் கும்ப்ளேவை நியமிக்குமாறு நெட்டிசன்கள் வலியுறுத்திவருகின்றனர். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று மீண்டெழுந்தது. ஆனால் அந்த வெற்றியை தொடர முடியாமல் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோற்று தொடரை இழந்தது.

லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்டில் படுதோல்வி அடைந்தபோதே கேப்டன் கோலி மீதும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமே அணி தேர்விலிருந்து அனைத்திலும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதல் போட்டியில் புஜாராவை சேர்க்காதது, இரண்டாவது போட்டியில் தவானை நீக்கியது, குல்தீப் யாதவை சேர்த்தது என அடுக்கடுக்காக அணி தேர்வு குறித்த விமர்சனங்கள் எழுந்தன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தபோது, போட்டிகளுக்கு இடையே போதிய இடைவெளி இல்லை என்று அணி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் போட்டிகளுக்கு இடையே தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. எனினும் இந்திய அணி தொடரை இழந்ததால் அந்த காரணத்தையும் சுட்டிக்காட்ட முடியாது. 

ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்தியாவிற்கு வெளியே இந்திய அணியின் ஆட்டம் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது. 

இந்நிலையில், ரவி சாஸ்திரியை தூக்கிவிட்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. நெட்டிசன்கள் ரவி சாஸ்திரியை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அதேநேரத்தில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற சிறந்த முன்னாள் வீரர்களை தலைமை பயிற்சியாளராக நியமிக்குமாறு வலியுறுத்துகின்றனர். 

அனில் கும்ப்ளேவின் பயிற்சியின் கீழ் இந்திய அணி வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடியது. அணியை சிறப்பாகவே வழிநடத்தி சென்றார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. அதன்பிறகு மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு கும்ப்ளே விண்ணப்பித்திருந்தார். எனினும் விராட் கோலியின் ஆதரவு ரவி சாஸ்திரிக்கு இருந்ததால் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளரானார். விராட் கோலிக்கும் கும்ப்ளேவிற்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவருவதால், ரவி சாஸ்திரிக்கு எதிரான குரல்கள் வலுத்துள்ளன. ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்திவருகின்றனர்.