எங்களோட பரம எதிரி நீங்கதான்டா!! ஐபிஎல் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அலறவிடும் மும்பை இந்தியன்ஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளை போல, ஐபிஎல்லில் இந்த இரு அணிகளும் மோதினால் ஆட்டம் அனல் பறக்கும்.
ஐபிஎல்லில் 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கப்படுகிறது.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் திகழ்கின்றன. இரு அணிகளுமே அதிகபட்சமாக தலா 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.
அதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளை போல, ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் மோதினால் அனல் பறக்கும். இரு அணிகளும் எதிரி அணிகளாக உள்ளன.
2010, 2013, 2015 ஆகிய மூன்று சீசன்களின் இறுதி போட்டியிலும் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 2010ல் மட்டும்தான் சென்னை அணி வென்றது. மற்ற 2 இறுதி போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
சமபலம் வாய்ந்த அணிகள் என்பதாலும், 3 முறை இறுதி போட்டிகளில் மோதியதாலும் இந்த இரு அணிகளும் எதிரி அணிகளாக உள்ளன. ஐபிஎல் 12வது சீசனுக்கான முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 3ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது எதிரி அணியான சிஎஸ்கேவிற்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை சுட்டிக்காட்டி டுவீட் செய்துள்ளது. அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த டுவீட்டின் மூலம் அவர்களது ரைவல் சிஎஸ்கேதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.